பெயர்:- மணிமேகலை
வாழ்விடம் :- கொழும்பு – இலங்கை
திருமதி மணிமேகலை அவர்கள் கொழும்பையே பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். பத்து வயதாக இருந்தபோதே பாடகியாக மேடையில் கால் பதித்த இவர் தொடர்ந்து பாடசாலை நாடகங்களில் நடித்து பின்னர் மேடைகளில் குழந்தை நட்சித்திரமாக மேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்த பிரபலமான கலைஞர்களின் ஆதரவும் மணிமேகலைக்குக் கிடைக்க ஆரம்பித்தது.
அந்த ஆதரவு காரணமாக வானொலி நாடகங்கள் தொலைக்காட்சி நாடகங்கள் தமிழ் சிங்களத் திரைப்படங்களென சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் தன்னை நிலை நிறுத்தி இன்னமும் கலைப்பணியாற்றி வருகின்றார்.
பிரபலமான கலைஞர்களான அமரர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் அரிச்சந்திரா மயானகாண்டம் நாடகத்திலும் கலாவினோதன் வில்லுப்பாட்டுச் சின்னமணியின் சத்தியவான் சாவித்திரி நாடகத்திலும் சில மேடைகளில் நடித்திருந்த மணிமேகலை அவர்கள் காத்தவராயன் போன்ற கூத்து நாடகங்களிலும் நடித்திருக்கின்றார் எனபதும் குறிப்பிடத்தக்கது.
இவரது கலைப் பணியைப் பாராட்டி பல பட்டங்கள் இவருக்குக் கிடைத்தாலும் கலைச்செல்வி என்னும் பட்டமே இவரது பெயருடன் நிலைத்து நிற்கின்றது. இலங்கை கலாச்சார அமைச்சு நடாத்திய பல நாடகவிழாக்களிலும் விருதுகளைப் பெற்றுள்ள இவரை 2004ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற கலாச்சார விழாவில் இலங்கையின் பிரதம மந்திரி பாராட்டி பரிசும் வழங்கிக் கௌரவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.