ஏ.வி.ஆனந்தன் நடிகர் – கவிஞர் – சிற்பக் கலைஞர்
நமது மண்ணில் பல வேறுபட்ட கலைகள் எல்லாம் அபரிதமாக வளர்ந்து வந்தபோதிலும் சிற்பக் கலை மட்டும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களின் கைகளிலேயே தேங்கி நிற்கின்றது. இந்தக் கலை ஏனைய கலைகளைப்போல சுலபமாகக் கற்றுக் கொள்ளக் கூடிய கலையும் அல்ல என்றே கூறவேண்டும். சிற்பக் கலையை தெய்வீகக் கலை என்றே கற்றவர்கள் கூறுகின்றார்கள். அப்படியான கலையை கட்டிக் காப்பவர்களில் ஓருவராக விளங்குகின்றார் திருவாளர் ஆனந்தன் அவர்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மல்லாகம் என்ற சிற்றூரில் பிறந்த ஆனந்தன் அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்! இன்று ஒரு தொழில் அதிபர்! அத்துடன் சிறந்த கவிஞர், நல்ல நடிகர், சிறந்த சிற்ப வல்லுனர், எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனிதர் என்று கூறுகின்றார் திருமறைக்கலா மன்றத்தின் இயக்குநர் திருமிகு சவரிமுத்து அடிகளார் அவர்கள்.
உலக நாடுகள் பல சென்று சிற்பக் கலையின் நுட்பங்களை அறிந்து அதன் அழகையெல்லாம் ரசித்து வந்த ஆனந்தன் அவர்களின் சிற்பக் கண்காட்சி திருமறைக் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் பல பாகங்கள் உட்பட அமெரிக்கா, கனடா, மற்றும் ஜரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நடைபெற்றிருக்கின்றது.
சிற்பக் கலையைப்பற்றி ஆனந்தன் அவர்கள் கூறும்போது நான் இந்தக் கலையை மரபு ரீதியாக படிக்காவிட்டாலும் இத் துறையில் நிபுணத்துவம் பெற்ற கலைஞர்களின் ஆலோசனைகளையும், சிற்பக் கலை பற்றிய நூல்களில் படித்தவையும்தான் என்னால் இத்துறையில் இவ்வளவு தெர்ச்சி பெற முடிந்தது”எனக் கூறியுள்ளார்.
இவர் திருமறைக் கலாமன்றத்தின் முக்கிய உறுப்பினராக இருப்பதோடு மன்றத்தின் நாடகங்கள் பலவற்றில் முக்கிய பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.