சைவமாமணி பண்டிதர் -வி.விஸ்வலிங்கம்
அமரர் வி.விஸ்வலிங்கம் அவர்கள் மட்டக்களப்பிற்கு தெற்கே படுவான்கரை எனச் சொல்லப்படும் வாவாவியின் மேற்குக் கரையில் உள்ள மண்டுர் கிரமத்தில் 10-01-1914 இல் பிறந்து, கழுவாஞ்சிக்குடியில் வாழ்ந்து, மட்டக்களப்பில் அமரத்துவம் அடைந்ததவர்.
ஆரம்பக் கல்வியை மண்டுரிலும் பின்னர் காரைதீவிலும் கற்று கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஆசிரியர் தொழில் கிடைக்கும் வரை முழுநேர விவசாயியாகவே வாழ்ந்த இவர் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் வழிகாட்டுதலில் கவிதைகள், பக்திப் பாடல்கள் என யாத்திருப்பதுடன் வடமோடி, தென்மோடி, நாட்டுக்கூத்து, கொம்பு விழையாட்டு, கிராமிய நாட்டுப்பாடல்கள் ஆகியவற்றில் பரிச்சயமுடையவராகி தானே அவற்றதைத் தயாரித்து அரங்கேற்றங்களும் செய்திருக்கின்றார்.
1939ம் ஆண்டு ஆசிரியர் தொழிலைப் பெற்று பதுளையில் பணிபுரிந்து கொண்டே பண்டிதராகவும் தன் கல்வி நிலையை உயர்த்திக்கொண்டார். பின்னர் களவாஞ்சிக்குடியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலைக்கு தெரிவு செய்யப்பட்டு இருவருட பயிற்சியில் தேர்வு பெற்று 1960ல் பட்டிருப்பு மஹா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று இளைப்பாறும்வரை அங்கேயே பணியாற்றினார்.
இவரது சைவ சமயப் பணிகளை மதித்தது நல்லை ஆதீனம் சைவமாமணி” என்னும் பட்டத்தையும், இவரின் இலக்கியச் சேவைகளைக் கௌரவித்து பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சு ‘இலக்கியச் செம்மல்” என்னும் பட்டத்தையும் பின்னர் 1993 இல் இந்து கலாச்சார அமைச்சினால் ‘ஞானசிரோன்மணி” என்னும் பட்டத்தையும் வழங்கியிருக்கின்றன.
இவரால் தயாரிக்கப்பட்டு இலங்கையின் பல பாகங்களிலும் அரங்கேற்றப்பட்ட நாட்டுக் கூத்துக்கள், வில்லுப்பாட்டுக்கள், என்பன பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. இவரால் ஆக்கப்பட்டு பல கவிதைத் தொகுப்புக்களில் விபுலானந்தர் அந்தாதி, காந்திஜி அருள்மொழி வெண்பா, பாரதி அந்தாதி, சேரன் செங்குட்டுவன், (ஒருமணிநேர நாட்டுக்கூத்து) மண்டூர் பிள்ளைத் தமிழ், என்பவை குறிப்பிடத்தக்கவை.
கலை, இலக்கியத்திலும் சைவப் பணிகளிலும் தன்னை முழமையாக ஈடுபடுத்திக்கொண்டு தனது எண்பத்தைந்து வயது காலம் வரை நோய் இன்றி சுறுசுறுப்பாக வாழ்ந்து வந்த திரு.வி.விஸ்வலிங்கம் அவர்கள் 01-03-1999ல் இயற்கை எய்தினார்.