பொப்பிசைப் பிதாமகன் -நித்தி கனகரட்ணம்
சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?
பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ?
அட வாடா மருமகா! என் அழகு மன்மதா!
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாள்!
1967ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களின் வாய்களில் எல்லாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த பாடல் இந்தப் பாடல்தான்! இதுதான் தமிழில் பாடப்பட்ட முதல் பொப்பிசைப் பாடலாகும். இந்த தமிழ்ப் பொப்பிசைப் பாடலின் பிதாமகனின் பெயர் நித்தி – கனகரட்ணம். இவரின் வரவிற்குப் பின்னர் ஏ.இ.மனோகரன், அமுதன் – அண்ணாமலை, அன்ரன் – டேவிட், என பலர் பொப்பிசைப் பாடல்களில் கொடி கட்டிப் பறந்தாலும் நித்தி- கனகரட்ணம் அவர்களின் பொப்பிசைப் பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடனேயே இருக்கின்றது.
நித்தி கனகரட்ணத்திற்கும் ஏனைய பொப் பாடகர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்? ஏனைய பொப்பிசைப் பாடகர்கள் பாடியிருக்கும் பாடல்களெல்லாம் இன்னொருவர் எழுதி வேறொருவர் இசையமைக்க இவர்கள் பாடியது. ஆனால் நித்தி – கனகரட்ணம் அவர்களோ தான் மேடையில் பாடும் பாடல்களையும் தானே எழுதுவார்! பாடலுக்குரிய மெட்டுக்களையும் தானே அமைத்துக் கொள்வார்! நித்தி கனகரட்ணம் பாடியிருக்கும் அனைத்துப் பாடல்களும் அவரே எழுதி அவரே இசையமைத்த பாடல்களாகும்.
உரும்பிராயில் பிறந்த நித்தி கனகரட்ணம் அவர்கள் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தாலும் ஜரோப்பிய நாடுகளுக்கு அடிக்கடி விஜயம் செய்து தனது துள்ளிசை நிகழ்ச்சிகளை நடாத்தி ரசிகர்களை மகிழ்வித்துகொண்டே இருக்கின்றார்.
சுமார் முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இவர் பாடிய…….
கள்ளுக்கடைப் பக்கம் போகாதே
உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகின்றேன்
கண்ணும் இருண்டிடும்! நெஞ்சும் வறண்டிடும்!
கை, கால் உளைந்திடும் இந்தக் கள்ளாலே!…..
என்ற பாடலை இவர் இப்போது பாடும் போதும் அது இப்பொழுதுதான் புதிதாகப் பாடப்பட்ட பாடலைபோல ரசிகர்கள் ஆவலுடன் கரகோசம் செய்து ரசிக்கின்றார்கள். திரு. நித்தி – கனகரட்ணம் அவர்கள் இன்றளவும் பொப்பிசை ரசிகர்களின் நெஞ்சங்களில் இருப்பதின் ரகசியம் இதுதானோ?