முத்தமிழ் வித்தகி எழுத்தாளர் பத்மா சோமகாந்தன்.
பிரபல எழுத்தாளர் அமரர் சோமகாந்தன் அவர்களின் துணைவியாரான திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது மாணவப் பருவத்திலேயே வீரகேசரி, ஈழகேசரி, சுதந்திரன், ஆகிய பத்திரிகைகளில் எழுதியவர். இவர் மாணவியாய் இருந்த காலத்தில் சுதந்திரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப் போட்டி ஒன்றில் பங்குபற்றி முதலாவது பரிசைப் பெற்று எழுத்துத் துறையில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். இதில் ஒரு விஷேசம் என்னவென்றால் இந்தப் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்றவர் பிரபல எழுத்தாளர் அமரர் கே.டானியல் அவர்கள்! மூன்றாவது இடத்தைப் பெற்றவர் ‘மல்லிகை” சஞ்சிகையின் ஆசிரியர் திரு. டோமினிக்-ஜீவா அவர்கள்!.
பெண்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் படிப்பதையோ! வேலைக்குச் செல்வதையோ! வரவேற்காத சமூகக் கட்டுபாடுகள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் உயர் கல்வி கற்று ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு கல்லூரி அதிபராக உயர்ந்த இவர். கல்லூரி அதிபராக பணிபுரிந்ததோடு சமூகப் பணிகளில் ஈடுபட்டும், பல முக்கிய பொது அமைப்புகளில் பதவி வகித்து பொதுப் பணிகளிலும் உழைத்து வருபவர்.
இவரின் எழுத்துப் பணிகளின் சாட்சியங்களாக மூன்று சிறுகதைத் தொகுதிகளும், அனுமன் சுவாமி, சின்மியானந்தர் கதை, போன்ற சில ஆன்மீக நூல்களும், ‘ஈழத்து மாண்புறு மகளீர்” என்னும் பெண்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூலும், சிறுவர்களுக்கான ஒரு ஆங்கில நூலும், இவைகளோடு நெஞ்சுக்கு நிம்மதி, பதில் தருகின்றார் பத்மா, பாராமுகங்கள் சில பார்வைகள், ஆகிய நூல்களையெல்லாம் வெளிக்கொண்டு வந்தும், பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் பல நேர்காணல்களையும் எழுதியிருக்கின்றார். அத்துடன் இவர் பயிலரங்குகள், கருத்தரங்குகள், போன்றவற்றின் வளவாளராகவும் செயற்பட்டதோடு ‘பெண்ணின் குரல்” என்னும் பெண்களுக்கான சஞ்சிகையின் ஆசிரியராக சுமார் பதினைந்து வருடங்கள் பணிபுரிந்திருக்கின்றார்.
தற்பொழுது இவர் ‘மைவெளி” என்னும் பெண்கள் ஊடக அமைப்பின் தலைவராக இருந்து வரும் இவரின் சேவையைப் பாராட்டி நீர்கொழும்பு இந்து இளைஞர் சங்கம் சில வருடங்களுக்கு முன்னர் ‘இலக்கிய கலா வித்தகர்” என்னும் பட்டத்தையும், மிக அண்மையில் ‘முத்தமிழ் வித்தகி” என்னும் பட்டத்தையும் வழங்கி கௌரவித்திருக்கின்றது.
அமரர் சோமகாந்தன், திருமதி. பத்மா சோமகாந்தன் ஆகிய இந்த தம்பதிகளின் நூல்கள் தமிழ் நாட்டிலும் பெரும் பாராட்டைப் பெற்றதோடு அங்கும் இவர்களின் நூல்களின் வெளியீட்டு விழாக்களும் இடம்பெற்றிருக்கின்றன. 2005ம் ஆண்டு சண் ரீவியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திரு.மாலன் அவர்கள் தனது அமைப்பான ‘திசை”யின் மூலமாக இலங்கையின் சிறந்த சிரேஸ்ற்ர பெண் எழுத்தாளர் என்னும் கௌரவத்தையும் வழங்கியது.
2004ம் ஆண்டு கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம் அவர்களின் அழைப்பை ஏற்று உதயன் பத்திரிகையின் ஆண்டு விழாவிற்கு பிரதம விருந்தினராகச் சென்ற இவரை அங்கும் பல மன்றங்கள், சங்கங்கள், பட்டங்களும் கௌரவங்களும் மரியாதைகளும் செய்திருக்கின்றன.
இப்படியாக பல சிறப்புகளைப் பெற்று பெண்களுக்கு பெருமை சேர்த்திருக்கும் திருமதி பத்மா -சோமகாந்தன் அவர்களின பணிகள் இன்னும் தொடர நாங்களும் வாழ்த்துகின்றோம்.