இலங்கையின் முதல் திரைப்பட நடிகை திருமதி ஜெயகெளரி
இலங்கையில் முதல் முதலில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படத்தின் பெயர் ‘சமுதாயம்’ என்பதாகும். இத்திரைப்படம் 16 எம்.எம். படச்சுருளில் எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படம் திரையருங்களில் திரையிடப்படவில்லை! பாடசாலைகளிலும் மண்டபங்களிலுமே திரையிடப்பட்டது. நடிப்புத் துறைக்கு பெண்கள் வருவது கௌரவக் குறைவாக கருதப்பட்ட அன்றைய நாட்களில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படத்தில் நடித்த நடிகை என்னும் பெருமைக்குரியவர் திருமதி ஜெயகெளரி அவர்கள்.
இவருடைய கலைப் பயணத்தின் ஆரம்பம் 1957ம் ஆண்டு ‘கவின் கலை மன்றம்” தயாரித்த பொம்மலாட்டம் நாடகமே பிள்ளையார் சுழியாகும். இவரை மேடைக்கு கொண்டு வந்தவர்கள் திரு.ஜே.பி.றொபர், திரு.ஜோன்-சாமிநாதன், ஆகிய நாடகக் கலைஞர்களாவார்கள். அத்துடன் புகழ் பெற்ற கலைஞர்களான “நடிகவேள்” லடிஸ் -வீரமணி, வானொலி நடிகர் என்.தாலிப், கெலயன் பெர்னாண்டோ, வேல் முருகன், நாகராஜன் போன்றவர்களும் அடக்கம்.
இவர் கவின் கலை மன்றத்தின் ‘எழுத்தாளன் காதலி” கவிஞர் நுவனின் ‘நூதன லஞ்சம்’ நாடக திரைப்படக் கலைஞர் பி.எஸ். கிருஸ்ணகுமாரின் ‘மார்த்தாண்டபுரி மகாராணி’ கே.எஸ் துரைசிங்கத்தின் ‘அன்புச்சுடர்’ வரணியூரானின் ‘சங்கிலியன்’ (இந்த நாடகத்தில் சங்கிலியனாக நடித்தவர் தினக்குரல் பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பாளரான திரு.எஸ்.பி.சாமி அவர்கள்) கலைவாணர் மன்றத்தின் ‘தீச்சுடர்” மனோரஞ்சித கலா மன்றத்தின் ‘கலிங்கத்துக் கைதி’ லடிஸ் வீரமணியின் ‘தாய் நாட்டின் எல்லையிலே’ ‘மானம் காத்த மறவன்’ ஆகிய நாடகங்களிலெல்லாம் இவருக்கு பெரும் புகழைத் தேடிக்கொடுத்தவையாகும். இவை தவிர வானொலி திரைப்படங்களில் புகழ் பெற்ற கலைஞரான ரொசாரியோ-பீரீஸின் ‘ஒரு மின்னல்’ திரையுலகில் புகழ் பெற்ற கமெராக் கலைஞராகவும் இயக்குனராகவும் இருந்த லெனின்-மொறாய்சின் ‘நீ இல்லையேல்’ ‘வாழாதே” நாடக நெறியாளர் சுகைர் -கமீட்டின் ‘பொம்மலாட்டம்’ ‘நகரத்துக் கோமாளிகள்’ போன்ற நாடகங்களிலும் நடித்த இவர், பல்லாயிரக் கணக்கான நேயர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘தணியாத தாகம்’ வானொலி நாடகத்தின் இயக்குநர் கே.எம்.வாசகருடன் இணைந்து ‘வாழாதே’ என்னும் நாடகத்தில் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றார்.
இவர் மனோரஞ்சித கான சபாவின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இன்று நாடறிந்த நாடக நெறியாளரான ‘காலாபூசணம்’ கலைச்செல்வன் அவர்கள் இவருடன் சிறுவனாக நடித்திருக்கின்றார். பின்னாளில் கலைச்செல்வன் இயக்கிய ‘எதிர்நீச்சல்’ நாடகத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இன்று இவரது மகள் பிரியங்கா அவர்கள் கலைச்செல்வனின் நாடகங்களில் நடித்துவருகின்றார்ர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அரை நூற்றாண்டு காலமாக கலைத்துறையில் ஈடுபட்டுவரும் இந்த நடிகையின் ஆற்றலையும் ஆழுமையையும் கௌரவிக்கும் விதமாக 2002ம் ஆண்டு இலங்கை அரசின் தமிழ் நாடக விழாவின் பரிசளிப்பின்போது கௌரவம் வழங்க நாடக ஆலோசனைக்குழு முடிவு செய்திருந்தது. அந்த நேரத்தில் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் அந்த விழாவும் நடைபெறவில்லை ஜெயகெளரிக்கு கௌரவமும் கிடைக்கவில்லை.
தமிழ்க் கலைஞர்களைக் கௌரவிக்க இலங்கையில் எந்த அரசும் முயற்சிக்காத போதிலும் திருமதி.ஜெயகெளரி அவர்களின் கலைப்பணி இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.