அமெரிக்கா, கனடா, ஜரோப்பிய நாடுகளென… அதிகமான மக்கள் திருண்டு வந்த… அதிக அரங்கங்களைக் கண்ட நடிகர் இவர் எனப் பெருமையுடன் கூறலாம்!

ஜரோப்பாவில் வாழ்கின்ற நமது கலைஞர்களில் அதிகமான அரங்கங்களைக் கண்ட நடிகர் என்னும் சிறப்பும்! அதே நேரத்தில் ஒரு கலை நிகழ்விற்கு அரங்கம் கொள்ளமுடியாத அளவிற்கு மிக அதிகமான மக்கள் வெள்ளமாக திரண்டு வந்த அரங்கங்களில் கலை நிகழ்ச்சிகளை நடாத்திய பெருமையும் கலைஞர் சின்னக்குட்டி தயாநிதி அவர்களுக்கு உண்டு!.

கனடாவில் ஒரு கலை நிகழ்விற்காக இவரை அழைத்திருந்தார்கள். இவர் தனது ‘நையாண்டி மேளம்’ கலைக் குழுவினருடன் அங்கு சென்றிருந்தார். பத்தாயிரம் மக்களும், ஐயாயிரம் மக்களும் அடங்கக்கூடியதான அருகருகே அமைந்திருந்த இரு அரங்குகளை இவர்களின் கலை நிகழ்வுகளுக்காக அமைத்திருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியைப் பார்க்க இந்திய சினிமா நடிகர்களின் நிகழ்வுகளைப் பார்க்க வருவதற்கும் அதிகமாக திரண்டு வந்திருந்த மக்களை உள்ளடக்குவதற்கு அதே போல இன்னும் இரண்டு அரங்கங்கள் தேவையாக இருந்தது!

நிலமையைச் சமாளிப்பதற்காக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கனடாவில் உள்ள தமிழ் வானொலிகள் மூலமாக ‘அரங்கங்கள் நிறைந்துவிட்ட காரணத்தால் மேலதிகமாக மக்களை கலை நிகழ்வு நடைபெறும் அரங்கத்திற்கு வரவேண்டாம்’ என ஒரு வித்தியாசமான அறிவிப்பை அறிவித்ததுடன், சுழற்சி முறையில் இரண்டு அரங்கங்களிலும், இரண்டு தடவைகள் இவர்களின் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார்கள்! இதுபோல ‘மாவீரர் தின நிகழ்வுகள்’ ‘தமிழர் விளையாட்டு விழாக்கள்” மற்றும் அது போன்ற பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடிய பல அரங்குகளிலெல்லாம் இவரின் கலை நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

இவரின் சகோதரர் ‘அப்புக்குட்டி’ ராஜகோபால் அவர்களும் உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நாடறிந்த கலைஞர். ‘அப்புக்குட்டி’ ராஜகோபால் அவர்களுக்கும் ‘சின்னக்குட்டி’ தயாநிதி அவர்களுக்கும் இயற்கையாகவே அமைந்திருக்கும் இவர்களது குரல் வளங்களே கலைத்துறையில் இவர்களது வெற்றிகளுக்குக் காரணம் என்று சொல்பவர்கள் ஏராளம்!

மேடை, வானொலி, தொலைக்காட்சி, சின்னத்திரை, என தயாநிதி அவர்களின் கலைப்பணி மிகவும் நீளமானது! தனது குடும்பத்திற்காக இவர் செலவிடும் நேரத்தைவிட கலைப் பணிக்காக இவர் செலவிடும் நேரம் அதிகம் என்றே கூறலாம். ஜரோப்பாவில் கலைஞர்களை தொழிற்துறை கலைஞர்களாக உருவாக்குவதற்கு முன்னோடியாக இருந்தவரும் இவர்தான்.

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கல்லூரியின் கலை நிகழ்வுகள் எதனிலும் பங்குபற்றாவிட்டாலும், படிப்பை நிறுத்திய பின்னர் கல்லூரியின் பழைய மாணவர்கள் நடாத்திய கலை விழாவில் ‘அட்டமத்துச் சனியன்” என்னும் நாடகத்தின் மூலமாக கலைத் துறைக்குள் நுழைகின்றார்! அதன் மூலமாக ஊருக்குள் நடிகன் என்னும் வரவேற்பும் கிடைக்கின்றது.

இணுவில் கந்தசாமி கோவில் மைதானத்தில் ஒரு பெரும் கலைவிழா! அண்ணன் அப்புக்குட்டி ராஜகோபால் அவர்களுடன் இணைந்து கொழும்பில் இருந்து பெரும் கலைஞர் பட்டாளமே வந்து கலைவிழாவை சிரிப்பலையால் அதிர வைக்கின்றார்கள்! அன்று அண்ணன் ராஜகோபால் அவர்களுடன் இணைந்து இவரும் ஒரு பாத்திரத்தில் நடிக்கின்றார். மூத்த கலைஞர்களான மரிக்கார் ராம்தாஸ், உபாலி-செல்வசேகரன், மணிமேகலை, போன்றவர்களின் பாராட்டுக்கள் எல்லாம் இவருக்குக் கிடைக்கின்றது. இதன் மூலமாக சிறந்த விளையாட்டு வீரரான தயாநிதி கொஞ்சம், கொஞ்சமாக கலைஞனாகவும் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறத் தொடங்கினார்.

1985ல் பிரான்ஸ் வந்த தயாநிதி அவர்கள் முதலில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்காக அரியாலையூர் வாசன் அவர்களின் ‘எழு” என்னும் நாடகத்தில் நடிக்கின்றார். முதல் நாடகத்தில் கிடைத்த கரகோசங்கள் உற்சாகத்தைக் கொடுக்க தொடர்ந்தும் சில் நாடகங்களில் நடித்துக்கொண்டு தானே நாடகங்களை எழுதவும் ஆரம்பிக்கின்றார். இவருடைய நாடகங்கள் அனைத்தும் தமிழ் மக்களின் அவலங்களை அம்பலப்படுத்துவதும் தமிழ்த் தேசியத்தின் வெற்றிக்கு பக்கபலமாக நிற்பவையாகவே இருந்தன.

தன்னுடைய நாடககங்கள் உயிர் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் மறைந்த ஈழமுரசு ஆசிரியர், மற்றும் இளங்கோ போன்றவர்கள் சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களைத் தந்து தன்னை நெறிப்படுத்தியதுதான் எனக்கூறும் இவர், பாரிஸ் தமிழர் கல்வி நிலையத்திற்காக ‘ஞானம் பிறந்தது” என்னும் நாடகத்தை எழுதிய தயாநிதி அந்த நாடகத்தில் நடித்திருப்பதுடன் அந்த நாடகத்தை இவரே இயக்கியுமிருந்தார். தொடர்ந்து இலங்கைக் கலையகத்தின் ‘கலையமுதம்” விழாவிலும் பொன்விழாக் கண்ட கலைஞர் தீர்ப்பு, உயிர்ப்பு 2000, போன்ற நாடகங்களில் நடித்து பல்தரப்பட்ட பாத்திரங்களையும் நடிக்கக்கூடிய நடிகர் என்னும் பெயரைத் தேடிக்கொள்கின்றார்.

1986ல் ஒரு திருமண விழாவில் அறிமுகமாகின்றார் மறைந்த கலைஞர் கடிப்பிசைக் காவலர் கிறெகரி-தங்கராசா அவர்கள். சில வருடங்களின் பின்னர் திருமறைக் கலாமன்றத்தின் ‘பலிக்களம்” நாடகத்தில் அவருடன் இணைந்து நடித்ததை இன்றும் நினைவு கூறுகின்றார்.

பல வானொலி, தொலைக் காட்சி நாடகங்களை எழுதி இயக்கியிருக்கும் இவர் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதி நெறிப்படுத்திய ‘தேவன்பட்டிக் கிராமம்’ என்னும் நாடகம் தன்னை மிகவும் கவர்ந்த நாடகம் என்கின்றார். ‘கலைக்கொரு விலை’ இவரது இன்னொரு நாடகம் குறும்படமாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அது நிறைவேறாதது இவருக்கு ஒரு மனக்குறையே! அதே நேரம் ஜரோப்பாவில் தயாரிக்கப்பட்ட பல சின்னத்திரைப் படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இவரது ‘உணர்வுகள்’ என்னும் நாடகம் புத்தகமாக வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அறுபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை தானே எழுதி இயக்கியிருக்கும் தயாநிதி அவர்கள் தனது ‘பொய் முகம்’ என்னும் நாடகத்தில் மூத்த கலைஞர் திரு.ரகுநாதன் அவர்களுடன் நடித்திருந்ததை பெருமையாக கருதுகின்றார். இதுபோல இவரது இன்னொரு நாடகமான ‘தேடி வந்த தேசம்’ என்னும் நாடகத்தில் தனது மகன் கௌதமனுடனும், மறைந்த நடிகை திருமதி நீலாட்சி அவர்களுடன் நடித்திருந்தார். பிரபல கலைஞரான பாலேந்திரா அவர்களால் அந்த நாடகம் பாராட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் தமிழ்க் கலைஞர் ஒன்றியம் வருடா வருடம் நடாத்தி வந்த ‘இனிக்கும் இரவினிலே” கலை விழாக்களில் அதிகமான நாடகங்களை அரங்கேற்றியவரும் இவர்தான்! இந்த ஒன்றியம் ‘பாரிஸ் வீடியோ மலர்’ என்னும் பெயிரில் வெளியிட்ட ஒன்பது வீடியோ மலர்களில் ஐந்து மலர்களில் இவரே நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தியிருக்கின்றார்.

ஆரம்பகால ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி வானொலியில் பிரியாலயம் துரைஸ், வண்ணை தெய்வம், ஆகியோருடன் இணைந்து தயாரித்த ‘பிரான்ஸ் நேரம்’ என்னும் நிகழ்ச்சியில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் தயாரித்த ‘நிஜங்களின் தரிசனம்’ என்னும் நிகழ்ச்சி நூற்றுக்கும் மேற்பட்டது! அது மட்டுமல்ல அதே வானொலியில் இவர் தயாரித்தளித்த ‘புரட்டாத பக்கங்கள்’ என்னும் தொடர் நாடகமும் முப்பத்து நான்கு அங்கங்கள் ஒலிபரப்பானது.

ரி.ரி.என். தொலைக்காட்சியில் கணேஸ் தம்பையா அவர்களின் நெறியாழ்கையில் ஒளிபரப்பாகிய ‘நையாண்டி மேளம்’ நிகழ்ச்சியில் இரா-குணபாலன், சுதா, ஆகியோருடன் இணைந்து இருநூறு அங்கங்கள் நடித்திருக்கின்றார். இவரின் கலைப் பணியைப் பாராட்டி ஆர்.ரி.எம். பிரதர்ஸ் நிறுவனத்தார் தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவித்திருக்கின்றார்கள்.