ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே… இரு கரம் கூப்புகின்றேன் வணக்கமம்மா…
ஈழத்தில் தயாரான ‘குத்துவிளக்கு” என்னும் திரைப்படத்தில் ஈழத்து ரத்தினம் என்னும் பெரும் கவிஞன் எழுதிய இந்தப் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்துப் பாடியவர் அமரர் எம்.ஏ.குலசீலநாதன் அவர்கள்.
இலங்கை வானொலியில் இவர் பணியாற்றிய காலத்தில் இவர் மெல்லிசைக்காக அரிய சேவைகளை ஆற்றியிருக்கின்றார். இந்தியப் பாடல்களையே இலங்கை வானொலியில் ஒலிபரப்பிவந்த காலத்தில் இலங்கை வானொலிக்காக முதலாவது மெல்லிசை பாடியவர் என்னும் சிறப்பு இவருக்கு உண்டு! இவர் பாடிய மெல்லிசைப் பாடல்களில் அமரர் சில்லையூர் – செல்வராசன் எழுதிய ‘ஞாயிறென வந்தாள்” என்.சண்முகலிங்கம் எழுதி அமரர் எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களுடன் இணைந்து பாடிய சந்தண மேடையெம் இதயத்திலே” பேராசிரியர் மௌனகுரு அவர்கள் எழுதிய சின்னச் சின்னக் குழந்தைகள்” இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கும் பாடல்களாகும்.
தாயகத்தில் அராலி என்னும் கிராமத்தில் பிறந்து சங்கீதத்தில் ஆர்வம் கொண்டு தமிழகத்தின் ஆண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல்த் தரத்தில் ‘சங்கீத பூசணம்’ பட்டம் பெற்றவர்களில் அமரர் குலசீலநாதனும் ஒருவராவார். தமிழ்நாட்டின் இசை மேதை பாலமுரளி கிருஸ்ணா அவர்களைக் குருவாகக் கொண்டு அவரைப் பின்பற்றி பாடி வந்த இவர், தாயகம் திரும்பி அங்கு நடாத்திய கச்சேரிகளால் இவர் பெற்ற புகழ்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்வரை இவரை அழைத்துச் சென்றது. அங்கு ‘இசைக் கட்டுப்பாட்டாளர்’ என்னும் உயர்ந்த பதவியில் இருந்த காலத்தில் இசை மேதைகள் பலரைப் பேட்டி கண்டிருக்கின்றார். இசை ஞானமுடைய இவரது கேள்விகளால் அந்த இசை மேதைகள் இவரைப் பாராட்டிய சம்பவங்கள் பல உண்டு.
கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் இல்லாதவர்களையும் சங்கீதத்தை ரசிக்கவைக்கும் ஆற்றல் படைத்தவர் அமரர் குலசீலநாதன் அவர்கள். அனேகமான கர்நாடக இசைக் கலைஞர்கள் மெல்லிசை, திரையிசை, ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.ஆனால் குலசீலநாதன் அப்படி எதனையும் விலக்கி வைக்கவில்லை! இவர் மெல்லிசையும் பாடியிருக்கின்றார்! திரையிசையும் பாடியிருக்கின்றார்!.
இலங்கை வானொலியில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளின் வானொலிகளில் கௌரவ கலைஞராகப் பணியாற்றியிருக்கின்றார். பின்பு பாரிஸ் வந்த பின்னர் ஜரோப்பிய நாடுகள் பலவற்றில் இசைக் கச்சேரிகள் செய்ததுடன் நடன ஆசிரியர் திரு.தயாளசிங்கம், நடன ஆசிரியை திருமதி கௌசல்யா – ஆனந்தராஜா போன்ற புகழ்பெற்ற நடன ஆசிரியர்களின் நடன அரங்கேற்றங்களில் எல்லாம் பங்குபற்றி சிறப்பித்திருக்கின்றார். அதுமாத்திரமல்ல பாரிசில் ஒரு இசைக் கல்லூரியை ஆரம்பித்து பல இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றார்.
இத்தகைய சிறப்புமிக்க இசைக்கலைஞரான குலசீலநாதன் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு பாரிஸில் அமரத்துவம் அடைந்தார்.