திருமறைக் கலா மன்றத்தின் மூலவேர்!
அருட்தந்தை மரியசேவியர் அடிகளார்.
“கலைப்பணி இறைபணி” என்னும் சொல்லை தனது தாரக மந்திரமாகக் கொண்டு தனது மதப்பணியையும் தாண்டி கலைப்பணியை பொதுப்பணியாகக் கொண்டு அதற்கு ஜாதி இல்லை! மதம் இல்லை! இனம் இல்லை! மொழி இல்லை! கலைக்கு முன் அனைத்துமே சமம் என்பதை செயலில் காட்டிவருபவர் மதிப்பிற்குரிய அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் அவர்கள்.
ஆரம்பத்தில் மதப்பணியை இலகுவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகவே “திருமறைக் கலா மன்றம்” என்னும் கலை மன்றத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தவர். பின்னர் பாரம்பரியம் மிக்க தமிழர்களின் கலைகளின் அனைத்து வடிவங்களும் காக்ககப்பட வேண்டும். அவை எந்த மதம் சார்ந்தவையாக இருந்தாலும் அவைகள் அனைத்தும் கலைதான் என்னும் உயர்ந்த கருத்தை செயற்படுத்த ஆரம்பித்து பின்னர் அதனை விரிவுபடுத்துவதற்காக உலகத்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் திருமறைக் கலா மன்றத்தின் கிளைகளை உருவாக்கி அதன் மூலமாக கலைப்பணியும் சமூகப்பணியும் ஆற்றிவருகின்றார்.
அடிகளாரின் இயக்கத்தில் கிறிஸ்த்தவ நாடகங்கள் மேடையேற்றப்பட்டதைவிட புராண, இதிகாச, நாடகங்களுடன் இலக்கிய நாடகங்கள், வரலாற்று நடகங்கள், இசை நாடகங்கள், மௌன நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், காத்தான் கூத்து, நாட்டுக்கூத்து, வடக்களரி, இப்படியா கலையின் அனைத்து வடிவங்களுக்கும் பயிற்சிக் கல்லூரிகள் அமைத்து புதிய புதிய கலைஞர்களை உருவாக்குவதிலும் கலைகளுக்கு புதிய வடிவங்கள் கொடுத்து நவீன நாடகங்களை அரங்கேற்றுவதிலும் திருமறைக் கலா மன்றத்திற்கு நிகராக வேறு எந்த அமைப்புகளும் இல்லை என்றே சொல்லலாம்! இவை அனைத்திற்கும் முழுக் காரணமும் மரியசேவியர் அடிகளார்தான்.
இயேசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை ‘பலிக்களம்” என்னும் பெயரில் வீடியோ திரைப்படமாக்கி முதன் முதலாக தமிழில் வீடியோ திரைப்படம் தயாரித்தவர் என்னும் பெருமைக்குரியவர் அடிகளார்தான்.
மரியசேவியர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘கலைமுகம்” என்னும் சஞ்சிகை மூலமாக ஏராளமான கலைஞர்களின் திறமைகள் பதிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இவை தவிர வானொலி நாடகங்கள், குறும்படங்கள் பலவற்றையும் இயக்கியிருப்பதோடு உலகம் முழுவதும் கலைப்பணி ஆற்றிவரும் அடிகளார் அவர்களின் கலைப்பணியைப் பாராட்டி மேலை நாடுகளில் வாழும் அறிஞர்களும், பெரும் கலைஞர்களும், சர்வதேச ரீதியான அமைப்புக்களும், அடிகளாருக்கு வழங்கிய பட்டங்களும், பரிசுகளும், வழங்கிய பாராட்டுக்களும், அடிகளாரின் அறுபதாவது பிறந்தநாளில் வெளியிடப்பட்ட “கலைத்தூது” என்னும் நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றது.
பன்மொழிப் புலவரான மரிய சேவியர் அடிகளார் அவர்களின் சிறப்புக்களை அடக்குவதற்கு தனியாகவே ஒரு புத்தகம் வெளியிடலாம். நாம் அடிகளாரின் கலைப்பணியை மட்டும் கௌரவித்து இங்கு பதிவு செய்து ஈழத்துக் கலைஞர் என்னும் இந்தப் பகுதிக்கு நாமும் சிறப்பளித்துள்ளோம்.