கலை இலக்கிய பன்முகச் செயற்பாட்டாளர் அந்தனி ஜீவா
கொழும்பில் இப்பொழுது தமிழ் நாடகங்கள் மேடையேற்றப்படுவது என்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது. ஆனால் சுமார் நாற்பது வருடங்களுக்கு முந்திய காலத்தை திரும்பிப் பார்த்தால் வாராவாரம் தமிழ் நாடகங்கள் மேடையேறாத அரங்கங்களே இல்லையெனக் கூறலாம். அந்தக் காலத்தில் கலைஞர் அந்தனி ஜீவா அவர்களால் மேடையேற்றப்பட்ட ‘அக்கினிப் பூக்கள்” என்னும் நாடகம் கலைஞர்கள் ரசிகர்களை மட்டுமல்ல அரசியல் வாதிகளையும் திரும்பிப் பார்க்க வைத்த நாடகமாகும். காரணம் அது தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்டதால்! முதலாளிகளுக்கு எதிராக செங்கொடிகளை ஏந்திக்கொண்டு அவர்கள் பொங்கி எழுகின்ற நாடகத்தின் இறுதிக் காட்சி பார்வையாளர்கள் மத்தியிலே ஒரு எழுற்சியையே ஏற்படுத்தியது எனக் கூறலாம். இந்த நாடகம் நாட்டின் பல பகுதிகளிலும் பதிநைந்து தடவைகளுக்கு மேல் மேடையேறியிருக்கின்றது.
இதுபோல இவர் எழுதி மேடையேற்றிய இன்னொரு நாடகமான ‘அணை அழுகிறது” என்ற நாடகம் பெரிய இடத்து அரசியல்வாதிகளின் தோல்களை உரித்துக்காட்ட முனைந்ததால் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
1970ல் ‘முள்ளில் றோஜா” என்னும் நாடகத்தை எழுதி இயக்கி தனது நாடகப் பிரவேசத்தை தொடங்கிய இவர் இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றி இருக்கின்றார். இவற்றில் ‘அலைகள்” என்னும் நாடகத்திற்காக 1978ம் ஆண்டு இலங்கை கலாச்சாரப்பேரவையால் இரண்டு விருதுகளைப் பெற்றிருந்தது. இதேபோல 1994ல் இந்து சமய கலாச்சார அமைச்சு நடாத்திய நாடக விழாவில் இவரின் ‘ஆராரோ ஆரிரரோ” நாடகம் சிறப்பு விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நாடகத் தறையில் ஒரு புதுமையாக வீதி நாடகங்களை (தெருக்கூத்து) மலையகத்தில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவரையே சாரும் இதற்கான பயிற்சியையும் அறிவையும் தொழில் நுட்பத்தையும் தமிழ்நாட்டின் வீதி நாடகங்களின் முன்னோடியான பாதல் சர்க்காரின் பயிற்சிப் பட்டறையில் கற்றவராவார்
கலைத்துறைபோல இலக்கியத்துறையிலும் முற்போக்குச் சிந்தனை கொண்ட திரு ஜீவா அவர்கள் பாடசாலைக் காலத்திலேயே ‘கரும்பு” என்னும் சஞ்சிகைக்கு சில காலம் ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் இருந்து எழுதத்தொடங்கியவர் சமசமாஜக் கட்சி வெளியிட்ட ‘ஜனசக்தி” பின்னர் ‘தேசபக்தன்” ‘குன்றின் குரல்” ‘கொழுந்து” ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியப் பணியிலிருந்த காலத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் விமர்சனங்கள் மிகவும் காத்திரமானவை.
இவர் சிங்களத்திலும் மிகவும் பரிட்சயம் உள்ளவர் என்பதனால் சிங்கள கலை இலக்கியவாதிகளாலும் நேசத்துடன் மதிக்கப்படும் இவரின் எழுத்துக்கள் இலங்கையில் உள்ள பத்திரிகைகளில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.
இதுவரை பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் ஜீவா அவர்கள் மலையகத்தின் இலக்கிய வளர்ச்சிக்காகவும் அப் பகுதியில் வாழும் எழுத்தாளர்களின் நல உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவுமாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த ‘மலையக கலை இலக்கி பேரவையி”யின் மூலமாக நூல் வெளியீடுகள் இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் நாடகப் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நடாத்தி மலையகத்தில் பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியிருக்கின்றார்.
இதேபோல இவர் தலைவராக இருந்த ‘மலையகம் வெளியீட்டகம்” சார்பாக இருபத்தி நான்கு நூல்களை வெளியிட்டிருப்பதும் இவரின் மிகப்பெரிய சாதனையாகும். இவற்றில் குறிஞ்சி மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) குறுஞ்சிக் குயில்கள் (கவிதைத் தொகுப்பு) ஆகிய நூல்கள் பலராலும் பாராட்டப்பட்ட நூல்களாகும்
கலை இலக்கியத் தாகம் காரணமாக தான் பணிபுரிந்து வந்த தொழிலைத் துறந்துவிட்டு தற்பொழுது கொழும்பில் இருந்துகொண்டு தமிழ்க் கலை இலக்கிய நண்பர்களுடன் இணைந்து கலை விழாக்கள் நடாத்துவதற்கு ஆவன செய்வதுடன் ‘கொழுந்து” என்னும் பத்திரிகையையும் நடாத்தி வருகின்றார்.