சீனித்தம்பி-கந்தையா
மட்டக்களப்பு
நடிகர், நாடக ஆசிரியர், இயக்குநர், இன்னும்….சங்கீதம், பண்ணிசை, ஓவியம், வாத்தியம், போன்ற கலைகளைக் கற்றுள்ள வித்தகர்.
மட்டக்களப்பில் கூத்துக்கலை மேலோங்கி நாடகக் கலை அறியப்படாத அந்தக் காலத்தில் வித்துவான் சரவணமுத்து அவர்கள் நாடகக் கலையை அங்கு வேரூன்ற வைக்க தொடர்ந்து ஆரையம்பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நாடகக் கலையை வளர்த்தவர் திருவாளர் சீனித்தம்பி கந்தையா அவர்கள்.
கம்பன் வீட்டுக் கடடுத்தறியும் கவி பாடும் என்பதற்கு ஒப்ப கந்தையா அவர்களின் குடும்பமே ஒரு கலைக் குடும்பம்தான். இவரது மனைவியின் தகப்பனார் திரு பொன்னம்பலம் அவர்கள் ஆரையம்பதியில் பிரபலமான பாடகரும் அண்ணாவியாரும் பூசகருமாவார்.
இவரின் தம்பி செல்லையா சிறந்த தோல் வாத்தியக் கலைஞரும் பூசகருமாவார். இவரின் தங்கை தங்கமணி கர்னாடக சங்கீத இசையில் வல்லவர். வாய்ப்பாட்டிலும் சிறந்து விளங்கியவர். இவரது இளைய சகோதரர் ஆறுமுகம் அவர்கள் ஒரு எழுத்தாளர். தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் ‘கல்கி” வார இதழ் 11961ல் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய “நந்தாவதி” என்ற சிறுகதைக்கு முதல்ப்பரிசு கிடைத்திருக்கின்றது. அத்துடன் ஆறுமுகம் அவர்கள் சிறந்த நகைச்சுவை நடிகருமாவார். அமெரிக்காவில் வாழும் முகுந்தன் யேர்மனியில் வாழும் அரவிந்தன் ஆகிய இவரது பிள்ளைகளும் எழுத்தாளர்களாக இருக்கின்றார்கள்.
திரு கந்தையா அவர்களின் இல்லமே ஒரு கலைக்கூடமாகவே காட்சி தரும். வீட்டின் வாசலில் இவரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட பூக்கள் பதிக்கப்பட்டிருக்கும். சுவர்களில் தொங்கும் உயிரோவியங்கள் அனைத்தும் இவரால் வரையப்பட்டவையே. வீட்டில் உள்ள மரச் சிற்பங்கள் தளபாடச் சாமான்கள் இவைகளைப் பார்க்கும்போது அந்த இல்லம் ஒரு அரும் காட்சியகமாகவே தோன்றும்.
ஆலயங்களில் இவரால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் ஓவியங்கள் திரைச்சீலைகள் இவரின் கலைத்திறனின் அடையாளச் சின்னங்களாக இன்றும் காட்சியளிக்கின்றன.
இவ்வளவு திறன் கொண்ட பல்கலைக் கலைஞர் அண்மையில் அமரத்துவம் அடைந்துள்ளார்.